சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அதன்படி சென்னை, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள 7841 சதுர அடி பரப்பிலான இடம் சாதுல்லா சாயுபு என்பவருக்கு வணிக பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக வாடகை தொகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால் அவர்மீது சென்னை மண்டல இணை ஆணையரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பின்படி நேற்று (22.7.2022) காவல்துறை உதவியுடன் வருவாய் துறையினரின் முன்னிலையில் வணிக நிறுவனம் அகற்றப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும்.